9809809149
ஸ்ரீ அகஸ்திய ஆஸ்ரமம் ஸ்ரீ சிவயோகி சித்தானந்த ஸ்வாமிகள் என்னும் ஸ்ரீ நொச்சூர் சுவாமிஜி அவர்களால் 1948 ம் ஆண்டு ஸ்தாபிக்கப் பெற்றது.
ஸ்ரீ ஸ்வாமிகளின் தகப்பனார் தமிழ் மொழிபால் மிகுந்த பற்று கொண்டதன் விளைவாக தனது மகனையும், தமிழ் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியுடன் சேலத்திற்குக் குடிபெயர்ந்து தனது மகனை தமிழ் கற்கச் செய்தார். அவ்வாறு கற்கும் வேளையில், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு ஏற்ப, ஒரு நாள் தனது வகுப்பு நண்பன் ஒருவன் இரண்டு மூன்று நாட்கள் பள்ளிக்கு வராத காரணத்தை அறிய, அவன் வீட்டிற்குச் சென்று அவனுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில், அவர்களுடைய வீட்டின் பரண் மேல் ஓலைச் சுவடிகள் பராமரிப்பு இல்லாமல் கிடப்பதைக்கண்டு, நண்பனிடம், ‘இந்த ஓலைச்சுவடிகளை ஏன் இப்படி போட்டு வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்க, ‘அது என்ன ஓலைச்சுவடி, என்ன எழுதி உள்ளது என்று இங்கு யாருக்கும் தெரியாது. அதனால் அதை அப்படியே போட்டிருக்கிறார்கள்’ என்று நண்பன் கூற, இவர் மனதிற்குள் இதை எடுத்துச்சென்று பாதுகாக்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் நண்பன், ‘இங்கு சும்மா தான் கிடக்கிறது, நீ வேண்டுமானால் எடுத்துச் செல்’ என்று கூற, இந்த விஷயத்தை ஸ்ரீ சுவாமிஜி தனது தந்தையிடம் கூறி, நண்பன் வீட்டுப் பெரியவர்களிடம் அனுமதி பெற்று அந்த ஓலைச்சுவடிகளை தனக்குப் பெற்றுதர வேண்டும் என்று வற்புறுத்த, அவரும் சென்று நண்பனுடைய பெற்றோர்களிடம் பேசி, வேண்டியவற்றை அளித்து, அந்த ஓலைச் சுவடிகளை வாங்கி வந்து தனது மகனிடம் அளித்தார். அது கிடைத்ததும் ஸ்ரீ சுவாமிஜி அவர்களுக்கு தன்னையும் அறியாமல் பரவச நிலை ஏற்பட்டு அதை தனது வீட்டில் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
தனது பள்ளிக் கல்வி பூர்த்தியான பிறகு தன்னுடைய சொந்த ஊரான நொச்சூர் கிராமத்திற்கு திரும்பி வந்துவிட்டார்கள் வந்த பிறகு ஸ்ரீ சுவாமிஜி அவர்கள் அந்த ஓலைச் சுவடியில் என்ன எழுதியுள்ளது என்று பார்க்கும் ஆர்வத்தில் அதை எடுத்துப் பார்த்தார். ஆனால் படிக்க இயலவில்லை. காரணம், அதில் உள்ள எழுத்துக்கள் நடைமுறை தமிழ் எழுத்துக்கள் போன்று அல்லாமல் வேறு மாதிரி இருந்ததால் அதை படிக்க இயலவில்லை. முயற்சியை கைவிடாமல் அதில் உள்ள எழுத்துக்கள் அறிந்த வித்வான்களிடம் சென்று கற்றுத் தேர்ந்தார். பிறகு அதை படிக்கத் தொடங்கினார். அவ்வாறு படித்து வரும் வேளையில், இந்த ஓலைச்சுவடியில் உள்ளவை, பகவான் ஸ்ரீ அகத்தியப் பெருமானால் எழுதப் பெற்றவை என்பதை அறிந்து கொண்டு மேலும் மேலும் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். அவ்வாறு படித்து வரும் வேளையில் அச்சுவடியில் வேத, ஆகம, மந்திரங்கள் ஸ்ரீ வித்தை, சிவ வித்தை போன்ற உபாசனா முறைகள், ஜோதிடம், மருத்துவம், பக்திப் பாடல்கள் போன்று அனேகம், அனேகம், அனேகம் விஷயங்கள் கூறப்பட்டிருப்பதைக் கண்டு வியந்தார். இதனிடையே, இந்த ஓலைச் சுவடிகளைக் கையாள்பவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய, ஜெபம், தியானம், உபாஸனா முறைகளும் கூறப்பட்டிருந்தது கண்டு அதன்படியே கடைபிடித்து ஒழுகலானார். அந்த வேளையில் ஸந்யாஸம் ஸ்வீகரிக்க வேண்டும் என்ற உத்தரவு கிடைத்தது. அதன்படி ஸ்ரீ அகஸ்திய பகவானையே குருவாக ஸ்வீகரித்துக் கொண்டு, ஸந்யாஸம் மேற்கொண்டு, ஸ்ரீ சிவயோகி சித்தானந்தா என்ற தீக்ஷா நாமத்துடன் ஸந்யாஸ வாழ்க்கையைத் தனிமையில் வாழத் தொடங்கினார். அந்த சமயத்தில் ஸ்தாபிக்கப் பெற்றது தான் இந்த ஸ்ரீ அகஸ்திய ஆஸ்ரமம்.
அதன் பிறகு நூலில் கண்ட அருளாணைப்படி காசிக்குச் சென்று ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் என்ற மரகத லிங்கமும், தக்ஷிண காசீஸ்வரர் என்ற ஸ்வேதலிங்கமும் கொண்டு வரப் பெற்று, ஆலயங்கள் ஸ்தாபித்து நித்ய பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வந்தன. ஸ்ரீ ஸௌபாக்ய கணபதி, ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ ஷண்முக மூர்த்தி, ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் (மரகத லிங்கம்) ஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி சமேத ஸ்ரீ ராஜ ராஜேச்வரி போன்ற மூர்த்தங்களுக்கும் ஆலயங்கள் எழுப்பப்பெற்று, பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இதற்கிடையில் ஸ்ரீ அகஸ்திய நூலில் கிடைக்கப் பெற்ற பொக்கிஷமான பக்தி பாடல்களை, ஸ்ரீ அகஸ்திய ஆஸ்ரம வெளியீடாக வெளியிட்டு பாரதமெங்கும் ஸ்ரீ அகஸ்திய தத்துவத்தை ஸ்ரீ அகஸ்திய கீத பஜனைகள் மூலம் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் தன்னுடைய அற்புதமான தெய்வீகக் குரலில் பாடி வந்தார். அந்த பாடல்கள் இன்றும் மிகவும் பிரபலமாக பலரால் பாடி வரப்படுகிறது. உதாரணமாக, ப்ரபோ கணபதே, ஷண்முக நாயகன் தோன்றிடுவான், லலிதா நவரத்தின மாலை, ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேச்வரி, செந்தூர் கடற்கரையில் போன்ற ஏராளமான பாடல்கள், எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் பலர் பாடி வருகின்றனர்.
ஸ்ரீ அகஸ்தியரின் ஓலைச் சுவடியில் ஜோதிடம் மிக முக்கியமான அம்சமாக விளக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஸ்ரீ சுவாமிஜி அவர்கள், அன்பர்களின் துயர் தீர அதன்மூலம் பரிகாரம் கண்டு மக்களுக்கு சேவை செய்து வந்தார். இவ்வாறு இந்த ஆஸ்ரமம் பலதரப்பட்ட மக்களின் குறைகளுக்கும், தோஷங்களுக்கும் ஒரு விமோசன ஸ்தானமாக விளங்கியது. இந்த கால கட்டத்தில், பல பெரியவர்களும், ஞானிகளும், சன்யாசிகளும், பீடாதிபதிகளும், இசைக் கலைஞர்களும், வித்வான்களும், மற்றும் பலரும் வந்து தரிசிக்கும் புண்ணிய பூமியாக விளங்கிய சமயத்தில் அனேக சித்தர்கள் ஒன்று திரண்ட கலவையாக விளங்கிய ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தர் பெருமான் அவர்கள் ஸ்தூலமாகவே இந்த ஆஸ்ரமத்திற்கு விஜயம் செய்து, அவருடைய குருவின் ஆணைப்படி சித்த பரம்பரையினரால் பூஜிக்கப் பெற்ற ஸ்ரீ ஸ்வேதார்க்கம் எனப்படும் வெள்ளெருக்கையும், ராகு, கேது ஸ்வரூபமாக விளங்கும் நாகத்தையும் தமது கரத்தால் பிரதிஷ்டை செய்து, இது சித்த பூமி, அனேக சித்தர்கள், ஸ்தூலமாகவும், சூக்ஷ்மமாகவும் ஸஞ்சரிக்கும் ஸ்தானம், ஸ்ரீ அகஸ்திய, ஸ்ரீ லோபா தேவியின் பரமாத்ம ஸ்தானம், என்று கூறி தன் கையில் வைத்திருந்த தண்டம் என்று கூறப்படும் கைத்தடியில் ஸ்ரீ பாலாம்பிகையை ஆவாஹித்து பிரதிஷ்டை செய்து, இங்கு வலம் வந்து மனம் உருகி பிரார்த்திப்பவர்களுக்கு அவரவர்களுடைய குறைபாடுகள், தோஷங்கள் தவிர்த்து நல்வாழ்வு அமையக் காண்பார்கள் என்று அருளியுள்ளார். அதன்படி இன்றும் அனேக அன்பர்களுக்கு இந்த இடம் அபய ஸ்தானமாக விளங்குகிறது.
அதன் பிறகு ஸ்ரீ அகஸ்திய சுவடியில் கண்ட அருளாணைப்படி ஸ்ரீ வைத்யநாதன் என்பவரை சீடனாக ஏற்று, அனைத்தையும் போதித்து முறைப்படுத்தி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வழிநடத்தினார். இந்த இடைப்பட்ட காலங்களில் ஸ்ரீ சுவாமிஜி அவர்களுடன் சூக்ஷுமமாக அனேக சித்தர்கள் தொடர்பு கொண்டு தமது கருத்துக்களை எழுத்து மூலம் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சித்த சைதன்யத்துடன் கூடிய நாட்களாக சென்று கொண்டிருந்த சமயத்தில் [29.09.2005] புரட்டாசி மாதம், க்ருஷ்ண பக்ஷ த்ருதியையில், ஸ்ரீ ஸ்வாமிஜி மஹா சமாதியடைந்தார். தொடர்ந்து ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் வழிகாட்டுதலின் படி, சிவஸ்ரீ வைத்யநாதன் செயல்பட்டு வருகிறார்.
ஸ்ரீ ஆதி அகஸ்திய நாடி முறைப்படி ஜோதிட விளக்கங்களும், பிரச்சினைகளை கடந்து நல் வாழ்வு அமைத்துக் கொள்ளக் கூறப்படும் பரிகாரங்களும், அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நல்ல முறையில் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீ ஆதி அகஸ்திய நாடியில் கூறப்படும் பரிகாரங்களும், வழி முறைகளும், மந்திர ப்ரயோகங்களும், மற்றெங்கும் காணக் கிடைக்காதவையாகும். ஈண்டு நடத்தும் அனைத்தும் சித்தர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தப்படுபவையாகும்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள : 04923 – 252510 அலைபேசி : 09995310433 / 09809809149 மின் அஞ்சல் : adhiagasthyanaadi@gmail.com